சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டுள்ள மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து மக்களின் உரிமைகளை பாஜ அரசு பறித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, திருநாவுக்கரசர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்கள். இக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற பரப்புரை கூட்டத்திற்கு பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் அணி திரண்டு வருகை புரிய வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.