சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு நேரில் ஆஜரான சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டை பார்த்து நீதிபதி வேல்முருகன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை, பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த மாஜிஸ்திரேட், நீதிமன்றம் அனுப்பிய சம்மனை காவல்துறையினர் திருப்பி அளித்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, உங்கள் மோசடிக்கு நீதிமன்றத்தையும் உடந்தை ஆக்குவதா என்று காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள். குற்றவாளிகளை கூட இவ்வளவு துன்புறுத்தியதில்லை.குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர், சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து தெனாவட்டாக செயல்படுகிறார்கள்.
இது என்ன போலீஸ் ராஜ்யமா?. இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படும் என்று உத்தரவிட்டார்.