Tuesday, June 17, 2025
Home செய்திகள் தொழில் முறையாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 50% கட்டண சலுகை: கட்டணம் ஏதுமில்லாமல் இசைக்கருவிகளையும் எடுத்துச்செல்ல அனுமதி: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை

தொழில் முறையாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 50% கட்டண சலுகை: கட்டணம் ஏதுமில்லாமல் இசைக்கருவிகளையும் எடுத்துச்செல்ல அனுமதி: அமைச்சர் சிவசங்கர் அறிக்கை

by Ranjith

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் என்ற தமிழ்நாடு இசை கல்லூரியில் கிராமிய இசை பயிலும் மாணவர், தனது இசைக்கருவியுடன் திண்டுக்கல், வடமதுரையில், தனது நிகழ்ச்சியை முடித்து திரும்பும்போது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பேருந்தில் தனது இசைக்கருவிகளுடன் பயண அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இது குறித்து நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் எடுத்துவந்த பொருள் பேருந்தின் உள்ளே லக்கேஜ் கேரியரில் நீட்டிக்கொண்டு இருந்ததால், இது மின் விளக்குகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை உடைத்து விடும் என்பதால், 6 நபர் இருக்கை அருகில் உள்ள இடத்தில் இறக்கி வைக்குமாறு நடத்துநர் கூறியுள்ளார். ஆனால், அவர் தவறான புரிதல் காரணமாக வீடியோ எடுத்துக்கொண்டு தாமாக பேருந்திலிருந்து இறங்கி சென்று விட்டதாக தெரிய வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டு புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டு புற கலைஞர்கள் மற்றும் இதர கலைஞர்கள் தொழில் முறையாக பயணம் செய்யும்போது 50 சதவீதம் பயண கட்டண சலுகையுடன் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் அவர்களின் இசை கருவிகள் மற்றும் தொழில் கருவிகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்லவும், அரசாணைகள் 1992, 1993, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கனவே 50 சதவிகித கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆடை அணிகலன்கள், ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்தியக் கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம், நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உறுமி. உடுக்கை, தவில், கொல்லிக் கட்டை, தப்பாட்டம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், காவடி ஆட்டம், கரகம் ஆட்டம், பொய்கால் குதிரை மற்றும் இதர சிறிய அளவிலான கருவிகள் பேருந்தில் எடுத்து செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டு புற கலைஞர்கள், இதர கலைஞர்கள் மற்றும் இசை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கலைஞர்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று ஊக்கம் அளித்து, உறுதுணையாக இருந்து வருகின்றது. அந்தவகையில், இந்த நிகழ்வை கவனத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில்,

இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடகக் கலைஞர்கள் எடுத்து வரும் கலை பொருட்கள் பிற பயணிகளுக்கு இடையூறுகள் இல்லாத படி பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும் எனவும்கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi