Saturday, December 2, 2023
Home » சிங்கப்பூர், ஜப்பானில் 9 நாள் பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு; 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1258 கோடிக்கு முதலீடு கிடைத்துள்ளது

சிங்கப்பூர், ஜப்பானில் 9 நாள் பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு; 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1258 கோடிக்கு முதலீடு கிடைத்துள்ளது

by Karthik Yash

சென்னை: சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக 9 நாட்கள் சென்று தொழில் அதிபர்களை சந்தித்து 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 1258 கோடி முதலீட்டை தமிழகத்துக்கு பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். அவரை திமுக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இப்போதே அரசு ஈடுபட தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 23ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். இந்த பயணத்தின்போது இரு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தார். முதலில் சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 24ம் தேதி அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். இந்தியா – சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில்துறையை சார்ந்த 350க்கும் அதிகமான வணிக நிறுவன பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அவர்களை முதல்வர் நேரில் சந்தித்து, தமிழத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி நேரில் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. அதேபோல் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். சிங்கப்பூர் பயணத்தை முடித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 25ம் தேதி ஜப்பான் நாட்டிற்கு சென்றார்.

தலைநகர் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல், வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கத்தின் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தபோது 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ. 819 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர் முன்னிலையில் கையெழுத்தாகின.

மேலும் ரூ. 128 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 9 நாள் வெளிநாட்டு பயணம் நேற்று காலையுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார்.

மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். நேற்று இரவு 10.15 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். வழி நெடுகிலும் தொண்டர்கள் நின்று முதல்வரை வரவேற்றனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலினின் 9 நாள் வெளிநாட்டு பயணம் நேற்று காலையுடன் நிறைவடைந்தது.
* சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டோக்கியோவில் இருந்து முதல்வர் சென்னை புறப்பட்டார்.
* மு.க.ஸ்டாலினை ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார். நேற்று இரவு முதல்வர் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?