Friday, June 20, 2025
Home செய்திகள்அரசியல் தமிழ்நாட்டில் போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளில் எந்த தொகுதியிலும் பாஜ முன்னிலை இல்லை: 4 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினர்

தமிழ்நாட்டில் போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளில் எந்த தொகுதியிலும் பாஜ முன்னிலை இல்லை: 4 எம்எல்ஏக்கள் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வினர்

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் பாஜ போட்டியிட்ட 19 மக்களவை தொகுதிக்குட்பட்ட 114 சட்டசபை தொகுதிகளிலும் முதலிடம் பிடிக்க முடியவில்லை. பாஜவின் 4 எம்எல்ஏக்கள் தொகுதியிலும் மக்கள் மண்ணைத்தான் கவ்வச் செய்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் கோவை தெற்கு தொகுதியில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது தமிழக சட்டசபையில் பாஜவின் பலம் 4 ஆக உள்ளது.

தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜவை அதிமுக கழற்றி விட்டு விட்டதால் பாஜ தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜ 19 தொகுதியில் நேரிடையாக போட்டியிட்டது. அதில் 11 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்தது. நாகையில் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜ எம்எல்ஏக்கள் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜவால் வெற்றி பெற முடியவில்லை.
கோவை தொகுதியில் பாஜவில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அவர் கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் 53,579 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 61,929 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதேபோல அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்கை ஜி.ராமச்சந்திரன் 19,044 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜ சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர் பாஜ வெற்றி பெற்ற நாகர்கோவில் தொகுதியில் 70702 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால், அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் 77,226 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பசலியான் நசரேத் வெறும் 8315 வாக்குகளை மட்டும்தான் பெற்றார்.

ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மொடக்குறிச்சி எம்எல்ஏவாக டாக்டர் சி.சரஸ்வதி உள்ளார். ஈரோடு தொகுதியில் பாஜ கூட்டணியில் தமாகா சார்பில் விஜயகுமார் போட்டியிட்டார். அவர் இந்த சட்டசபை தொகுதியில் வெறும் 13678 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பிரகாஷ் 101549 வாக்குகள் பெற்று அசத்தியுள்ளார். அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 38694 வாக்குகள் பெற்றார். திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ளார். இந்த திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் பாஜ சார்பில் களம் இறக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் 64,732 வாக்குகள் பெற்றுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலின்போது நயினார் நாகேந்திரன் 90212 ஓட்டுக்கள் வாங்கியிருந்தார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தார். தற்போது இரு கட்சிகளின் ஓட்டுக்களை கூட்டினாலும் கடந்த முறை வாங்கிய வாக்குகளை கூட பெற முடியவில்லை. ஆனால், அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபட் புரூஸ் 84338 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அதிமுகவில் போட்டியிட்ட ஜான்சிராணி 13,634 வாக்குகள் பெற்றுள்ளார். இப்படி பாஜ வெற்றி பெற்ற 4 தொகுதிகளிலும், திமுக கூட்டணியினர் அதிக வாக்குகளை பெற்று, பாஜவை கதி கலங்கச் செய்துள்ளனர். சொந்த தொகுதியிலேயே பாஜவினர் கடும் பின்னடைவை சந்தித்தது, பாஜவினர் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பையை காட்டுகிறது. இது பாஜவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi