புதுடெல்லி: ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த காதலனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் என்ற பெண், கல்லூரியில் ஆங்கிலம் பயின்று வந்ததோடு, மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழியும் கற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
சில மணி நேரங்கள் கழித்து மெஹக்கின் தாய் தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது மெஹக் ஜெயின் அடுத்த 2 முதல் 3 மணிக்குள் வீடு திரும்புவதாக கூறினார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், ஆர்ஷ்க்ரித்தின் தந்தை, மெஹக்கின் தந்தையை தொடர்பு கொண்டு, ஆர்ஷ்க்ரித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மெஹக் ஜெயின் தனது நண்பர்கள் மூலம் எனது மகனை தாக்கியதாகவும் கூறினார்.
இதனால், மெஹக்கின் குடும்பத்தினர் உடனடியாக ஜஹாங்கீர்புரி காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு தங்களது மகள் எங்கே? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் மெஹ்ராலி காவல் நிலையத்தில் சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டனர். உடனடியாக மெஹ்ராலி காவல் நிலையத்திற்கு சென்ற போலீசார், தங்களது மகள் மாயமானது குறித்து புகார் அளித்தனர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்ஷ்க்ரித், 200 மில்லி பெட்ரோல் பாட்டில் மற்றும் கத்தியுடன் சஞ்ஜய் வனத்தில் அமர்ந்திருந்தார். அங்கு மெஹக் ஜெயினை வருமாறு அழைத்துள்ளார். அவரும் சஞ்சய் வனத்திற்கு சென்றார். மெஹக் வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மெஹக்கை ஆர்ஷ்க்ரித் குத்திக் கொன்றார்.
பின்னர் மெஹக்கின் முகத்தையும், உடலையும் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அதனால் பகுதியளவு எரிந்த நிலையில் மெஹக்கின் உடல் கைப்பற்றப்பட்டது. மெஹக்கின் தந்தையிடம் விசாரித்த போது, ஆர்ஷ்க்ரித் ஏற்கனவே இரு முறை தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், அவனை தடுத்தபோதும் கேட்கவில்லை என்றும் கூறினார். மெஹக்கின் மூத்த சகோதரி அளித்த வாக்குமூலத்தில், தனது சகோதரி மெஹக்கின் செல்போன் எண்ணை ஹேக் செய்து, அவர் சமூக வலைதளங்களில் செய்தி அனுப்பினாலும், அவரது இருப்பிடத்தை ஆர்ஷ்க்ரித் கண்காணித்ததாகவும் கூறினார். தற்போது, ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை கொன்று எரித்த ஆர்ஷ்க்ரித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.