சென்னை: சென்னை மாநில கல்லூரி மாணவர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா மாணவர்கள் மோதலை அடுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என பிற கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அடுத்து காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் 231 மாணவர்கள் தொடர்புடைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா கணித மேதை சீனிவாச ராமானுஜர், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பச்சையப்பன் கல்லூரியில் படித்துள்ளதாகவும், நோபல் பரிசு வென்ற சர் சிவி ராமன், மற்றும் பிரபல நீதிபதிகள் மாநில கல்லூரியில் படித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி புகழ் பெற்ற இந்த கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து வேதனை தெரிவித்து தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், குற்ற்வாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என கூறிய நீதிபதி கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க அறிஞர்கள், கல்வியலாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளார். மாணவர்களை மோதலை அடுத்த பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களை நடத்த வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.