Saturday, May 17, 2025
Home செய்திகள் அப்துல் ரகுமான் பிறந்தநாள் அரசு விழா; கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

அப்துல் ரகுமான் பிறந்தநாள் அரசு விழா; கோவை செம்மொழி பூங்காவில் தமிழ்த்தாய் சிலை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

by Neethimaan

* கல்யாணசுந்தரனாருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நடந்த தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்விவரம்:
* தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் கலைஞர் தலைமையில் 2010-ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அந்த மாபெரும் விழாவினை எந்நாளும் நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாகவும் கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும்.
* தமிழ்மொழியின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் பற்றுக்கொண்டு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினைப் போற்றும் விதமாக தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையினை தமிழறிஞர்களுக்கு ரூ.4,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500/-லிருந்து ரூ.7,500/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
* மேலும் 10 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

* தமிழ்த்தென்றல் கலியாணசுந்தரனாரைப் போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான துள்ளம் என்கின்ற துண்டலம் கிராமத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும்.
* புதுதில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படும். இதற்கென தொடராச் செலவினமாக ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
* அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபாவின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘அறிஞர்களின் அவையம்’ என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும்.

* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்’ சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையும் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விடுதியில் தங்கிப்பயிலும் 45 மாணவர்களுக்கு 2025-2026 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi