சென்னை: காவல் துறையில் பொதுவாக சாதாரண வழக்கு என்றால் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் என்ஐஏ வழக்கில் 150 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே கோவை கார் வெடிப்பு வழக்கில் என்ஐஏ வழக்கு பதிவு செய்து இன்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையடுத்து கோவை கார் வெடிப்பு வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) 6 பேர் மீது நேற்று மாலை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அப்போது இந்த வழக்கில் மீதமுள்ள 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்த, என்ஐஏ அதிகாரிகள் 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதற்கான மனுவையும் நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் ெசய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், மனு மீது விசாரணை நாளை(இன்று) நடைபெறும் என அறிவித்தார். அதைதொடர்ந்து நீதிமனற்த்தில் அழைத்து வரப்பட்ட 5 குற்றவாளிகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்ஐஏ அதிகாரிகள் புழல் சிறையில் அடைத்தனர். கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் 4வது முறையாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேநேரம் கோவை கார் வெடிப்பு வழக்கில், நீதிமன்றத்தல் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிக்கை குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ஜமெஷா முபின் பயன்படுத்தியது அதிக சேதத்தை ஏற்படுத்த கூடிய ஐஇடி வகையை சேர்ந்த குண்டை பயண்படுத்தியுள்ளார். மேலும், இவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் நிர்வாகிகளின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவர் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளார். தமிழகத்தில் கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் வெடி குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால், மீதமுள்ள 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.