மதுரை: கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்படாது என பாஜகவுக்கு பழனிசாமி சொல்லியதாக புரிகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டையே உலுக்கிய மேலவளவு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறி 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் முருகேசன் உள்பட 7 பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாட்டில் நடந்த கொடூரமான சாதிய வன்கொடுமை மேலவளவு துயரம்.
இந்நாளில் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலவளவு கிராமத்தை அரசு சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்று கூறினார். கூட்டணி ஆட்சிக்கு அதிமுக உடன்படாது என பாஜகவுக்கு பழனிசாமி சொல்லியதாக புரிகிறது. கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை என பாஜகவுக்கு தான் பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை கபளீகரம் செய்ய யார் முயற்சிக்கிறார்கள் என்பதற்கும் பழனிசாமி பதில்கூற வேண்டும். அதிமுகவை கபளீகரம் செய்ய முயல்வது பாஜகதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கூட இருந்து கொண்டே தான் ஒரு கட்சியை கபளீகரம் செய்ய முடியும். அதிமுக- பாஜக கூட்டணியில் இணைப்பு இருக்கிறதே தவிர பிணைப்பு இல்லை. அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றும் தீர்ப்பு ஜனநாயகப் படுகொலை. கொடிக்கம்ப உரிமைகளை பாதுகாக்க கட்சிகள் முன்வர வேண்டும். அரசியல் உரிமைகளை பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். காவல்நிலைய தொடர் மரணங்கள் கவலை அளிக்கின்றன என்று கூறினார்.