Tuesday, July 8, 2025
Home செய்திகள்Showinpage சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு: உணவின் தரம், அளவு குறித்து கேட்டறிந்தார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு: உணவின் தரம், அளவு குறித்து கேட்டறிந்தார்

by Francis

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு உணவு தரம் குறித்து ஊழியர்களிடையே கேட்டறிந்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 1.50 ஆயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர், ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகின்றன.

உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் ரூ.148.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் ரூ.400 கோடியும் , அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக ரூ.69 கோடியும் என மொத்தமாக ரூ.469 கோடி செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட அரசு வழிவகுத்துள்ளது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சி 122வது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு இருந்த பயனாளிகளோடும் உரையாடினார்.

பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடி செலவில் வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும் ரூ.21 கோடி செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi