சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 115 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 57 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு முதல்வர் பணிநியன ஆணைகளை வழங்கினார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் பணி தொய்வின்றி நடைபெற காலி பணியிடங்களை நிரப்பிடும் வகையில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர் மற்றும் 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள்/விரிவுரையாளர்கள் என மொத்தம் 115 உதவி மருத்துவ அலுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இதுபோல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பணிநியமனம் செய்யப்பட்ட 57 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தலைவர் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் கூடுதல் இயக்குநர் சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.