Thursday, June 19, 2025
Home செய்திகள்Showinpage தூய்மை இயக்கம் மூலம் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி, மீள்பயன்பாடு மேற்கொள்ளும் ஒரு மாபெரும் முன்னெடுப்பு

தூய்மை இயக்கம் மூலம் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி, மீள்பயன்பாடு மேற்கொள்ளும் ஒரு மாபெரும் முன்னெடுப்பு

by Arun Kumar

சென்னை: தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது
கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் செயல்பாட்டின் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (05.06.2025) மாநிலம் முழுவதும் 1100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அவ்வலுவலக கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தலைமைச் செயலகம், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநகரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகிய 1100 அலுவகங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி அலுவலக கழிவுகளை சேகரித்து தங்கள் அலுவலகங்களுக்கு வந்த கழிவு சேகரிப்பவர்களிடம் அளித்தனர்

இந்தப் பணிகளை கண்காணிக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது அதனை இன்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது அரசு தலைமைச் செயலாளர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்டச் செயலாக்க துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

இந்த முன்னெடுப்பின் கீழ், மாநிலம் முழுவதும் இதுவரை சுமார்
250 மெட்ரிக் டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கிராம ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களிலும் பின்னர் அரசு கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்று கழிவுகள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi