சென்னை: ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் 4 மாதங்களில் தொடங்குகிறது. சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2021ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், தொல்பொருள் பகுதி என்பதால் எழுந்த சிக்கல், கொரோனா பெருந்தொற்று, ஊழியர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பணிகளில் தாமதம், முதன்மை பீடத்தில் வேலைகள் முடிவடையாதது என இழுபறியாக சென்று கொண்டிருந்தது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கிளாம்பாக்கம் பேருந்து பணிகள் குறித்து நேரடியாக கண்காணித்து பணிகளை விரைந்து முடிக்க துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், துறை அதிகாரிகளும் அமைச்சர்களும், தொடர் ஆய்வு செய்து பணிகளை வேகப்படுத்தினர். இப்பொழுது பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. விரைவில் பேருந்து முனையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை படிப்படியாக இரண்டிலிருந்து, மூன்று கட்டங்களாக இயக்குவதற்கான திட்டங்கள் அரசு சார்பில் வகுக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி, செல்வதற்கு வசதியாக அயன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சிவேகே. சாலை முதல் ஊரப்பாக்கம் வரையிலும், புது சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், முடிச்சூர் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் அதற்கான ஒப்புதல் வழங்கி உள்ளார். கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியையும் தெற்கு ரயில்வேக்கு சிஎம்டிஏ வழங்கியுள்ளது. இந்த பணிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ளது. மேலும், 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை -செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இது வண்டலூருக்கும் ஊரப்பாகத்திற்கும் இடையே அமைய உள்ளது. இதனால் சென்னையின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை எளிதில் வந்தடைய முடியும். சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.