சென்னை: அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 10,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றினார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அரசு வேலைக்கு உள்ள மதிப்பு என்றும் குறையாது:
அரசு வேலைக்கு இருக்கும் மவுசு காலத்திலும் குறையாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அவரின் பல தலைமுறைக்கும் பயன் அளிக்கும். அரசு தீட்டும் எந்த திட்டமும் மக்கள் நன்மைக்காகத்தான் என கூறினார்.
அரசு பணியில் தன்னலம் கருதாத பலர் உள்ளனர்:
அரசு ஊழியர்களில் பலர் தன்னலம் பாராமல் பணி செய்து வருகின்றனர். உடல் உறுப்பு தானம் செய்து முதல் அரசு மரியாதை பெற்றவர் அரசு ஊழியர். உடல் உறுப்பு தானம் செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் வடிவேல் குடும்பத்தினருக்கு நன்றி என முதலமைச்சர் தெரிவித்தார்.
10.000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் முதல்வர்:
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி. மூலம் 5,278 இளநிலை உதவியாளர்கள், 3399 தட்டச்சர்கள், 1077 சுருக்கெழுத்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 67 வரி தண்டலர்கள் மற்றும் 19 கள உதவியாளர்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டனர் என்றார்.
அரசு இயந்திரம் சிறப்பாக செயல்படுகிறது:
அரசு எனும் மாபெரும் இயந்திரம் சிறப்பாக செயல்படுகிறது; அரசு ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு கலைஞர் ஆட்சியில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று எஸ்எஸ்சி நடத்தும் தேர்வு தமிழ் மொழியிலும் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் போட்டித் தேர்வுகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை:
டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை விரைவாக திருத்தும் பணியில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை வெளிப்படையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் தாமதத்தை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை எளிதாக்க ஆன் ஸ்க்ரீன் எவால்யூஷன் லேப் அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
2 ஆண்டுகளில் 50,000 பேர் அரசு பணியில் சேர்க்கப்பட உள்ளனர்:
நடப்பாண்டில் மேலும் 17,000 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50,000 பேரை அரசு பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் செலவு செய்து படிக்கும் பயிற்சிகளை அரசு இலவசமாக தருகிறது என்றார். எனக்கு கிடைக்கும் நல்ல பெயரும், கெட்ட பெயரும் அரசு அதிகாரிகளாகிய உங்கள் மூலமாகத்தான் வரும். பிரச்னைகளோடு வரும் மக்களை அமரவைத்து அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள். மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் காது கொடுத்து கேட்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் சேவைதான் லட்சியமாக இருக்கவேண்டும்:
அரசுப் பணிக்கு தேர்வாகி இருப்பவர்களுக்கு மக்கள் சேவை ஒன்றுதான் லட்சியமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். எப்படியாவது அரசுப் பணி வாங்கிவிட வேண்டும் என்பதே இளைஞர்களின் கனவாக உள்ளது. அரசு எந்திரம் நன்றாக செயல்பட வேண்டுமெனில் அரசு அலுவலர்கள் நன்றாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.