சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இணைய வழி கழிவு பரிமாற்ற மையம் அறிமுகம்: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு
சென்னை: தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விரைவான தொழில்துறை விரிவாக்கம், சாம்பல், மின்னணு கழிவுகள் மற்றும் பல தவிர்க்க முடியாத கழிவுகளையும் உருவாக்குகிறது. இத்தகைய கழிவு பொருட்களை உயர் மதிப்புள்ள சந்தைப்பொருட்களாக மாற்றும்போது, அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமைகிறது. இந்த நோக்கத்தை அடைவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் தொடங்கும் ஒரு புதுமையான முயற்சியே இணைய வழி கழிவு பரிமாற்ற மையம் (Online Waste Exchange Bureau). இந்த தளம், கழிவு உருவாக்குபவர்களையும், சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்கள் மற்றும் பிற கழிவு பயன்பாட்டாளர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது. இதன்மூலம், கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்ற வழிவகை செய்வதுடனும், கழிவு பரிமாற்றத்தையும் எளிதாக்குகிறது. பலர் ஏற்கனவே இந்த இணையவழி கழிவு பரிமாற்ற தளத்தில் பதிவு செய்துவிட்டார்கள். பதிவு செய்யாதவர்களும் இன்றே பதிவு செய்யவும். இணைய வழி கழிவு பரிமாற்றம் செய்ய tnpcb.gov.in/OWEMS-ல் என்ற இணையவழி சேவையை அணுகுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


