சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்ஸி) இயக்குனர் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கங்கள், இசையமைப்பாளர் சங்கம் என மொத்தம் 23 சங்கங்களை உள்ளடக்கியது. தற்போது இந்த சம்மேளனத்திற்கு எதிராக தொழிலார்களின் வாழ்வை அழிக்கும் விதமாக சில நிர்வாகிகள் புதிய கூட்டமைப்பை உருவாக்க முயற்சிப்பதாக பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெப்ஸி சம்மேளனத்தில் உள்ள 23 சங்கங்களில் மொத்தம் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 55 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சம்மேளனத்தில் உள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள சில நிர்வாகிகள் புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதை எதிர்க்கும் விதமாக ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். அதன்படி, வரும் 14ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள திரைப்படம், தொலைக்காட்சி, வலை தொடர், விளம்பரம் ஆகிய படப்பிடிப்பில் சம்மேளன தொழிலாளர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். இந்த நாளில் போஸ்ட் புரொடக்சன்ஸ் போன்ற எந்தவொரு பணிகளும் நடைபெறாது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க நினைக்கும் இதுபோன்ற தீய செயல்பாடுகளை தடுத்து திரைத்துறையில் சுமுக நிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.