சென்னை: இளம்பெண் காதல் விவகாரத்தில் சினிமா உதவி இயக்குனரை கடத்திய வழக்கில் குண்டர் சட்டத்தில் தொழிலதிபர் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமாரன்(22). இவரை இளம்பெண் காதல் விவகாரத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு கும்பல் கடத்திச்சென்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து தாக்கிவிட்டு தப்பினர்.
இதுசம்பந்தமாக அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் பாலசுப்பரமணிய தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதில், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சந்திரசேகர்(33), ஆதித்யா(21), கார்த்திகேயன்(25), அகஸ்டின்(21) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் டேனியல்(42), இவரது நண்பர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த அந்தோணி(35) ஆகியோர்தான் உதவி இயக்குனரை கடத்தினர் என்பது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் சென்னையில் பைனான்ஸ் தொழில் நடத்திவரும் டேனியல் கம்பெனியில் உதவி இயக்குனரின் காதலி வேலை செய்தபோது அவரை திருமணம் செய்துகொள்ள டேனியல் விரும்பியுள்ளார். ஆனால் இளம்பெண் சம்மதிக்காததுடன் தான் உதவி இயக்குனரை காதலித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் தனக்கு காதலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி ஆத்திரம் அடைந்த டேனியல், அந்த இளம்பெண்ணுக்கு தினமும் டார்ச்சர் கொடுத்ததால் வேலையில் இருந்து நின்றுவிட்டார். இதன்காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் உதவி இயக்குனரை கடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து தொழிலதிபர் டேனியல் உள்பட 5 பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். டேனியல் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதா என்று விசாரணை செய்தபோது கடந்த 2018 – 2020 ஆண்டுகளில் வேலைவாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்துள்ளதாக புகார் உள்ளது. இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில், உதவி இயக்குனர் கடத்தல் தொடர்பாக சிறையில் உள்ள டேனியலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், சென்னை பெருநகர காவல்ஆணையர் அருணுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில் மீண்டும் டேனியலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.