விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பழைய பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நாடு நாசமாக போய்விட்டதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சங்கிகளுக்கு எதை பற்றியும் கவலையில்லை, எதைபற்றியும் பேசமாட்டார்கள். தொலைகாட்சிகளில் அழகி போட்டி நடத்துவதைபோல், மோடி ரோடு ஷோவை நடத்தி கொண்டிருக்கிறார். விவசாயிகள் போராட்டம் தற்போதும் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. 2014ல் விவசாயிகளுக்கு அறிவித்த வாக்குறுதிகளை மோடி அரசு செய்யவில்லை. இதனை எதிர்த்துபோராடும் அவர்கள் மீது தாக்குதல், துப்பாக்கி சூடுதான் நடக்கிறது. தேர்தல் ஆணையம் நாட்டுக்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க ஒரு லட்சம் கோடி செலவு செய்கிறது. ஆனால் தலைவருக்கு பதிலாக தரகரைதான் தேர்வு செய்யும் தேர்தலாக நடக்கிறது. உரிமைகளை காக்க ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement


