*சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் எச்சரிக்கை
சித்தூர் : சித்தூர் வயதான பெற்றோரை கவனிக்காத மகன்கள் மற்றும் மகள்களிடமிருந்து பிரிவு 125ன் கீழ் பராமரிப்பு வசூலிக்கப்படும், பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான எம்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
சித்தூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான எம்.எஸ். பாரதி நேற்று சித்தூர் தப வனம் முதியோர் இல்லத்தில் அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் உத்தரவுகளின்படி சித்தூர் மாநகரத்தில் உள்ள தபவனத்தில் உள்ள முதியோர் இல்லத்தை ஆய்வு செய்தேன்.
அரசியலமைப்பின் மூலம் முதியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வயதான பெற்றோரை கவனிக்காத மகன்கள் மற்றும் மகள்களிடமிருந்து பிரிவு 125ன் கீழ் பராமரிப்பு வசூலிக்கப்படும்.
பெற்றோர்கள் சம்பாதித்த சொத்து நன்கொடை பத்திரம் மூலம் மகன்கள் மற்றும் மகள்களுக்கு மாற்றப்பட்ட பிறகு மகன்கள் மற்றும் மகள்கள் வயதான பெற்றோரை முறையாக கவனிக்கவில்லை என்றால், பெற்றோர் எழுதிய நன்கொடை பத்திரம் ரத்து செய்யப்படும்.
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் முதியவர்கள் தாக்கல் செய்யும் இதுபோன்ற வழக்குகள் தொடர்பாக மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் இலவச சட்ட சேவைகளை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக முதியவர்கள் இருக்கும் ஆசிரமத்தை நீதிபதி ஆய்வு செய்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை கேட்டறிந்தார். மேலும் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறதா? அவர்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளதா? என்று முதியவர்களிடம் விசாரித்தார்.
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் ஓய்வு ஊழியர்கள் நல சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.