சென்னை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 11ம் தேதி இரவு 8.48 மணி முதல் 12ம் தேதி இரவு 10.44 மணி வரை (திங்கட்கிழமை) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திலிருந்து வரும் 11ம் தேதி 1,156 பேருந்துகளும் மற்றும் 12ம் தேதி 966 பேருந்துகளும் மாதவரத்திலிருந்து 11ம் தேதி 150 பேருந்துகளும் 12ம் தேதி 150 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.
மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 11ம் தேதி 1,940 பேருந்துகளும் 12ம் தேதி 1,530 பேருந்துகளும் தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.
இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 11, 12ம் தேதி களில் இயக்கப்படும்.
இதுதவிர சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.