Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிட்லபாக்கம் ஏரியில் கூடுதல் வசதிகள் ரூ.25 கோடியில் ஆடிட்டோரியம், சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

தாம்பரம்: ரூ.25 கோடியில் ஆடிட்டோரியம், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கப்பட்ட நிலையில், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் சிட்லபாக்கம் பெரிய ஏரி உள்ளது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஏரி முழுவதும் ஆகாய தாமரை செடிகள் பரவியதாலும், ஆக்கிரமிப்புகள் பெருகியதாலும் ஏரி 50 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கியது. பயனற்ற நிலையில் உள்ள ஏரியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்த குப்பை கிடங்கு முழுமையாக அகற்றப்பட்டது. 2020ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் ரூ.25 கோடியில் ஏரி சீரமைக்க திட்டமிடப்பட்டு அங்கிருந்த பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், காவல் நிலைய கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு, ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி, ஆழப்படுத்தப்படுத்தப்பட்டது.

கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு ஒரு பகுதியில், நடைபாதை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பூச்செடி, திறந்தவெளி ஆடிட்டோரியம், சிறுவர் விளையாட்டு பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு ஏரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தனர். இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா, திமுக தீர்மனாக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், பகுதி செயலாளர் செம்பாக்கம் இரா.சுரேஷ், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.