Monday, September 25, 2023
Home » செங்கல்பட்டில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்

செங்கல்பட்டில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்

by Ranjith


செங்கல்பட்டு: செங்கல்பட்டில், குழந்தைகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24,09,927 லட்சம். இம்மாவட்டத்தில், 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகள், ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 32 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல், சுமார் 37 ஆயிரம் கர்ப்பிணிகள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர்.  இந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புதன்கிழமை தோறும் செலுத்தப்பட்டு வருகின்றது.துணை சுகாதார நிலையங்களுக்குட்பட்ட இடங்களில் வாரம் ஒரு பகுதியென 4 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நமது மாநிலம் தட்டம்மை ரூபெல்லாவை 2023 டிசம்பருக்குள் 50 சதவீதம் ஒழிக்க வேண்டுமென்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் 2 தவணை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் முறையே பிறந்த 270 நாட்கள் முடிந்தவுடனும் 16வது மாதம் முடிந்தவுடனும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி செலுத்தப்படாத குழந்தைகள் விடுபட்ட குழந்தைகள் ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது.
அதன்படி, நமது மாவட்டத்தில், ஒரு வயதுக்குட்பட்ட 1,198 குழந்தைகளும், ஒரு வயது முதல் 2 வயதுக்குட்பட்ட 371 குழந்தைகளும், 2 வயது முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 70 குழந்தைகளும், 348 கர்ப்பிணிகளும் விடுப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் அனைத்து மாநிலங்களிலும் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது.

முதல் சுற்று ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும் நடைபெற்றது. 2வது சுற்று நேற்று துவங்கி, வரும் 16ம் தேதி வரையிலும், 3வது சுற்று அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் சுற்றின் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராகுல் நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் மருத்துவ கல்லூரியில் பயிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சென்றனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?