Wednesday, June 18, 2025
Home செய்திகள்குற்றம் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன் கைது

தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் சிசுவை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி, காதலன் கைது

by Ranjith

திருமயம்: திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார். புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினோதா (20). இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்ததால் திருமணத்திற்கு முன் வினோத கர்ப்பமானார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வினோதா வீட்டிற்கு வந்துள்ளார். நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா நேற்று முன்தினம் வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததார். திருமணமாகாத நிலையில் பெண் குழந்தையினை பெற்றெடுத்ததால் உறவினர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என வினோதா நினைத்து மனவேதனை அடைந்தார்.

உடனே அவர், தான் பெற்ற குழந்தையை, தனது வீட்டு வாசலிலேயே யாருக்கும் தெரியாமல் உயிருடன் குழி தோண்டி புதைத்தவிட்டார். இதற்கு அவரது காதலன் சிலம்பரசன் உடந்தையாக இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பாக்கியம் என்ற பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அங்கும், இங்கும் சுற்றிப்பார்த்தார். அப்போது, வினோதா வீட்டு வாசலில் மண்ணுக்குள் குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை பாக்கியம் தோண்டி எடுத்த போது, குழந்தை உயிருடன் இருந்தது.

உடனே குழந்தையை அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குபின், மேல்சிகிச்சைக்காக குழந்தை புதுக்கோட்டை ராணியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி விஏஓ செந்தில்குமார், போலீசாரிடம் புகார் செய்தார். அதன்படி பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதா மற்றும் அவரது காதலன் சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi