பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’’ என்ற தலைப்பில் பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நேற்று மாலை பெரம்பூர் பாரதி சாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பேசினர். சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா, செயற்குழு உறுப்பினர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது; என்னுடைய ராசி நான் எதை துவக்கினாலும் அது விளங்கும். அமைச்சர் சேகர்பாபுவை நம் பக்கம் கொண்டு வந்து சேர்த்தவன் நான். சென்னையின் அரசியல் 70 ஆண்டுகாலமாக எனக்கு தெரியும். இந்தி எதிர்ப்பு என்பது இந்தி ஆட்சி மொழியாக ஒரு ஓட்டில் வென்று தப்பி தவறி வந்தது பீடையாக. ராஜாஜி இருக்கும்போது மும்முனை போராட்டம் நடத்தினார்கள். இப்போது இந்தி, மாநில நிதி பகிர்வு உள்ளிட்ட மும்முனை போராட்டம் இப்போதும் நடைபெறுகிறது.
அண்ணா இறந்ததும் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்தது. ஆனால் அண்ணாவை விட கலைஞர் அதிகம் எதிர்த்தார். கலைஞர் மறைவிற்கு பின் அவருடைய மகன் சோட்டா பாய் என எண்ணினார்கள். ஆனால் அவர் யாருடைய மகன் வீரியமாக இருக்கிறார். அதனால்தான் ஒன்றிய அமைச்சரை பார்த்து நமது முதல்வர் யாரும் சொல்லாததை சொல்கிறார் நாவடக்கம் தேவை என்று. கலைஞருடன் 53 ஆண்டுகள் பழகியவன் நான். கலைஞர் போல் ஒரு தலைவரை பார்க்கமுடியாது. ஒரு தொண்டனிடம் மன்னிச்சுடு பா என்றார். அப்பேற்பட்ட தலைவர். தளபதியை குழந்தையாக பார்த்தேன். அவர் இன்று வளர்ந்து தலைவராக உள்ளார். 10 முறை டெல்லி சென்று அகில இந்திய தலைவரானார் கலைஞர்.
இன்று இரு முறை டெல்லி சென்று அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறார் தளபதி. அகில இந்திய அளவில் பெரிய எதிர்கட்சி தலைவராக உருவாகியுள்ளார். எந்த தேர்தலையும் சந்திக்க கூடிய ஆற்றலும் தைரியமும் தலைவருக்கு உள்ளது. எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. கலைஞரையே மிஞ்சிவிடுவாரோ என எண்ணுகிறேன். அடிகளை அளந்து வைக்கக்கூடிய தலைவர். அவர் இருக்கும் வரை தமிழுக்கு ஆபத்தில்லை. நம் யாருக்கும் ஆபத்தில்லை.
இவ்வாறு பேசினார்.