சென்னை: பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ள செல்வக்குமார் என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சித்தும், போலியான புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, திமுக பிரமுகர் ஆறுமுகசாமி என்பவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு குற்றவியல் வழக்கறிஞர் கிஷோர்குமார் ஆஜராகி, அரசியலமைப்பு சட்டத்தில் பேச்ச்சுரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவை கொடுக்கப்பட்டாலும், அவை வரம்பிற்குள் செயல்பட வேண்டும். ஆனால் மனுதாரர் வரம்பை மீறி செயல்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் பலரும் இதே போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, பாஜக நிர்வாகி செல்வக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.