சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஏவுகணைகள் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். இத்தகைய சூழ்நிலையில் ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் அணு ஆயுதக் குற்றச்சாட்டைச் சுமத்தித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
உலகத்தின் நாட்டாமையாக தன்னைத் தானே பாவித்துக் கொண்டு இது போன்ற கொடுஞ்செயலில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஈரானும் பதிலடி கொடுத்துவரும் நிலையில் தேவையற்ற போர்ப் பதற்றம் உருவாகி இருக்கிறது. ஐநா வகுத்துத் தந்துள்ள எந்த விதமான மனித உரிமை வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவது இல்லை. அப்பாவி பொதுமக்கள் மீதும் அண்டை நாடுகளின் மீதும் போர் வெறியோடு ஏவுகணை வீசி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் மோடி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது இந்தியா. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து மோடி அரசு கண்டிக்க மனமில்லா சூழலில் ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும்.
ஏற்கனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப்பாதை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்கிறேன். அனைத்து இந்திய மக்களின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் முதல்வரின் வீரியமிக்க அறிக்கை அமைந்துள்ளதற்கு நெஞ்சார்ந்த நன்றி.