முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ள சமுதாய நலக்கூடத்தின் இறுதிக்கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு
சென்னை: பேரறிஞர் அண்ணா பெயரில் 18.12.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ள கொளத்தூர், ஜி.கே.எம் காலனியில் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தின் இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் வருகின்ற 18.12.2025 அன்று கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.25.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேரறிஞர் அண்ணா பெயரில் திறக்கப்படவுள்ள புதிய சமுதாய நலக் கூடத்தின் இறுதிக் கட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று (09.12.2025) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து கண்காணித்திட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த சமுதாயக் கூடம் 40,300 சதுரடி பரப்பளவில் தரைத்தளத்தில் கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடனும், முதலாவது தளத்தில் ஒரே சமயத்தில் 435 நபர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் உணவுக்கூடம், இரண்டாவது தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமண மண்டபம் மூன்றாம் தளத்தில் 10 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள் வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இராயபுரம் மண்டலம், வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடக் கட்டுமானப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வட சென்னைப் பகுதிக்குட்பட்ட மக்களுக்கு பெரிதும் பயன்தரும் வகையில் நவீன வசதிகளுடன் உயர்தரமாக கட்டப்பட்டு வரும் இந்த சமுதாயக் கூடங்களில் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் கட்டடமானது, தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 28,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தரைத்தளத்தில் 30 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 50 எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம், முதல்தளத்தில் உணவருந்தும் கூடம், சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகள், இரண்டாம் தளத்தில் திருமண நிகழ்விடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர், வார்டு-57க்குட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிநீர் தேக்க நிலையத்தின் முன்னேற்றப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது கூடுதல் தலைமைச் செயலாளர்/தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், வட்டார துணை ஆணையாளர்க்ள் எச்.ஆர். கௌஷிக், (மத்தியம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), மண்டலக் குழுத்தலைவர்கள் சரிதா மகேஷ் குமார், பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் எ.நாகராஜன், பி.அமுதா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


