சென்னை: ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றார். ஜி20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லிக்கு சென்றனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று விருந்தில் பங்கேற்க, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று காலை 10.05 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விருந்து அளித்தார். இந்த விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு, இன்று காலை 9.50 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து புறப்பட்டு, பகல் 12.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.