அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்! : பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!!
புதுடெல்லி: பாபாசாஹெப் அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி,“மகாபரிநிர்வான் திவாஸ் நாள் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு தலைவணங்குகிறோம். டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியத்திற்கான அயராத போராட்டங்கள், வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. அவரது பங்களிப்பை நினைவுகூறும் இந்த நாளில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் உள்ள சைத்ய பூமிக்கு நான் சென்றிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்," இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதே போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,"கற்பி - புரட்சி செய் - ஒன்றுசேர்”பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் - கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்!கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை அமைத்தவர் அவர்!தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி - நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்! "இவ்வாறு தெரிவித்தார்.


