Tuesday, April 23, 2024
Home » விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு எதிரொலி; முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் விரைகிறார்

விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு எதிரொலி; முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் விரைகிறார்

by Neethimaan

* தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு
* ஸ்பிரிட் விற்பனை செய்யும் தொழிற்சாலைகளுக்கு சீல் என எச்சரிக்கை

சென்னை: விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பிற்பகலில் செல்கிறார். இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பிக்கள், ஆணையர் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்று முன்தினம் அமரன் என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்துள்ளார். இதை சாப்பிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 9 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று விஷச் சாராயத்தை குடித்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. விஷச் சாராய மரணம் தொடர்பாக விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தலைமறைவான 4 பேரை பிடிக்க 10 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான மரக்காணத்தைச் சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மீது ஏற்கனவே விஷச் சாராயம் விற்பனை தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரிடம் இருந்த விஷச் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்விற்கு அனுப்பி சோதனை செய்ததில், அதில் எத்தனால் மற்றும் மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. வழக்கமாக புதுவையில் இருந்து தமிழகத்துக்கு மதுபானங்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தனர். ஆனால் போலீசார் மதுபான கடத்தலை தடுத்ததால், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எத்தனால் மற்றும் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கு மண்டலத்தில் போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கினர். அந்த வேட்டையில் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 421 பேர் அடையாளம் காணப்பட்டு 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

260 பேர் எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வடக்கு மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து இந்த எத்தனால் மற்றும் மெத்தனால் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், எங்கிருந்து விற்பனை செய்யப்பட்டது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் எச்சரித்துள்ளார். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை சந்தித்து பேசவும், மரணமடைந்த குடும்பத்தினருக்குஆறுதல் கூறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்கிறார்.

அதேநேரத்தில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ள சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி ஆணையிட்டுள்ளார். மேலும், வனப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழ்நாடு முழுவதும் கள்ள சாராய வேட்டையை போலீசார் அதிரடியாக தொடங்கியுள்ளனர். இதற்கிடையே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடக்கு மண்டலத்தில் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 421 பேர் அடையாளம் காணப்பட்டு 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 260 பேர் எச்சரிக்கை செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

1 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi