Saturday, July 12, 2025
Home செய்திகள்Banner News முதலமைச்சரின் திட்டங்களால் பயனடைந்த மக்கள்.. வேலூர் பயணத்தில் உற்சாக வரவேற்பு அளித்து நெகிழ்ச்சி..!!

முதலமைச்சரின் திட்டங்களால் பயனடைந்த மக்கள்.. வேலூர் பயணத்தில் உற்சாக வரவேற்பு அளித்து நெகிழ்ச்சி..!!

by Lavanya

சென்னை: முதலமைச்சரின் திட்டங்களால் பயனடைந்த மக்கள் வேலூர் பயணத்தில் உற்சாக வரவேற்பு அளித்து நெகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.6.2025, 26.6.2025 ஆகிய இரண்டு நாள் பயணமாக வேலூர்- திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். சென்னையிலிருந்து 25.6.2025 புதன்கிழமை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காட்பாடி வழியாக வேலூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுக பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

பொதுமக்களிடம் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் பொதுமக்கள் வழங்கிய மனுக்களையும், பொன்னாடைகளையும், பூங்கொத்துகளையும் பெற்றுக் கொண்டார்கள். பொதுமக்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக முதலமைச்சரை பார்த்து கைகுலுக்கி, செல்பி எடுத்துக் கொண்ட காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. வேலூர் சென்றடைந்த முதலமைச்சர் வேலூரில் ரூ.168 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்தார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 21 ஆயிரத்து 766 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினார்கள். பொற்செல்வி என்னும் கூலித்தொழிலாளியின் கோரிக்கையினை ஏற்று உடனடியாக அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக அவரை நியமனம் செய்து உரிய பணி ஆணையை வழங்கினார்கள். வேலூர் மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திருப்பத்தூரை நோக்கி மாலை 5.30 மணிக்குக் காரில் புறப்பட்ட முதலமைச்சர் திருப்பத்தூருக்கு இரவு 11.30 மணியளவில்தான் 6 மணி நேரம் பயணித்து வந்து சேர்ந்தார்கள்.

அந்த அளவுக்கு முதலமைச்சர் செல்லும் வழி முழுதும் பொதுமக்கள் நிறைந்து காணப்பட்டதால், ஆங்காங்கே முதலமைச்சர் காரை விட்டு இறங்கி தம்மைக் காண ஆர்வமுடன் திரண்டு காத்திருந்த பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்து மகிழ்ந்தார். ஆண்களும் பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் முதலமைச்சர் தம் அருகில் வந்ததும், அவரிடம் கைகளை நீட்டி, கைகுலுக்கி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பல இடங்களில் பெண்களும் குழந்தைகளும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அப்போது முதலமைச்சர் குழந்தையுடன் நின்ற பெண்களைப் பார்த்து அவர்களின் கையிலிருந்த குழந்தைகளை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். இது குழந்தைகளிடம் முதலமைச்சர் காட்டும் பாச உணர்வை எல்லோருக்கும் வெளிப்படுத்தியது. இந்தச் சுற்றுப் பயணத்தில் காணப்பட்ட முக்கிய அம்சம் என்னவென்றால், வழிஎங்கும் பெண்கள் அதிக அளவில் திரண்டு நின்று வரவேற்பு அளித்ததுதான். அதற்கு முக்கியக் காரணம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 முதல் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ள சிறப்பான திட்டங்களின் பயன்கள்தான் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

பல இடங்களில் பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் எங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கிடைப்பது எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் குடும்பத்தில் எங்களுக்குத் தனி மரியாதை கிடைக்கிறது. அதற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காகவே, இங்கே வந்தோம் என்று கூறினார்கள். இளம் பெண்களும், இளைஞர்களும் கூடி நின்று நாங்கள் கல்லூரிகளில் படிப்பதற்கு முதலமைச்சரின் புதுமைப்பெண் திட்டமும், தமிழ்ப் புதல்வன் திட்டமும், மாதந்தோறும் வழங்கும் 1,000 ரூபாய் எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

அத்துடன், இரண்டு பெண்கள் சேர்ந்து ஐயா தாங்கள் இந்தப் புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் கொடுப்பதனால்தான் கல்லூரி செல்லும் வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. இல்லையென்றால் நாங்கள் படிப்பை நிறுத்த வேண்டிய ஏழ்மை நிலையில்தான் எங்கள் குடும்பம் உள்ளது. இதனால் எங்கள் வாழ்நாள் முழுவதும் முதலமைச்சருக்கு நன்றி செலுத்துவோம் என்று கூறினர். குழந்தைகளுடன் கூடிநின்ற சில பெண்கள், முதலமைச்சரிடம் தங்களுடைய காலை உணவுத் திட்டத்தால் காலையில் கூலி வேலை செய்ய புறப்படும் நேரத்தில் உணவு தயாரிக்கும் சிரமம் இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

எங்கள் குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவு உண்டு மகிழ்கிறார்கள். உங்களை எண்ணும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இதுவரை நாங்கள் காணாத ஒரு தலைவரையும் ஆட்சியையும் தமிழ்நாட்டில் கண்டு பெருமிதம் அடைகிறோம். தாங்கள் நீடூழி வாழ வேண்டும்! தங்களுடைய ஆட்சி 2026-ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நீடிக்க வேண்டும்! எங்களைப் போன்ற ஏழைகள் பயன்பெறும் திட்டங்களை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.

எங்கள் குடிசை வீட்டை மாற்றி, கான்கிரீட் வீடு கட்டுவதற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் நிதி வழங்கிய முதலமைச்சருக்கு காலம் முழுவதும் எங்கள் குடும்பம் நன்றி செலுத்தும் என ஒரு பெண் கூறி கைகுலுக்கியது எல்லோரையும் அந்தப் பெண்ணை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பயனடைந்த பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது. இப்படிப் பலரும் வழிநெடுகக் கூடிநின்று முதலமைச்சரை ஆர்வமுடன் கண்டு, அவரைப் பாராட்டி, வாழ்த்தி கைகுலுக்கி மகிழ்ந்த காட்சிகள் இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகவே திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi