தமிழ்நாட்டின் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2023 2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெல்லோஷிப் உதவித்தொகை(CMRF) தகுதித் தேர்வுக்குத் தகுதியான தமிழக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகைக்கு மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் 60, அறிவியல் 60 என மொத்தம் 120 விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் / பதிவுக்கட்டணம் கிடையாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான தகுதிகள்: தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் இறுதி செமஸ்டரில் உள்ள மாணவர்களும் CMRF தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் முதுகலைப்பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு, மேல்நிலை / டிப்ளமோ, S.S.L.C. தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த உதவித்தொகை பெற ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 45 சதவீதம் மற்றும் மற்றவர்களுக்கு 50 சதவீதம் ஆகும். மேலும் CMRF தகுதித் தேர்வில் தரவரிசை மற்றும் CMRF திட்டத்திற்கான விதிமுறைகளின் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்தப் பயன்பாட்டு முறையும் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை 15.11.2023, மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.