டெல்லி: சத்தீஸ்கர் முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கரின் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் நிதியமைச்சர் ராமேஷ்வர் ஓரோனின் மகன் மற்றும் மற்றவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சி, தும்கா, தியோகர் மற்றும் கோடா மாவட்டங்களில் உள்ள சுமார் 34 வளாகங்களை மத்திய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் உள்ளடக்கி சோதனை செய்து வருகின்றனர்.
அதுபோல, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீட்டிலும், சிறப்பு உதவியாளர்கள் இருவர் வீடுகளிலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களில் மதுபான விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் அரசியல் ஆலோசகர் வீடுகளில் சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸை அச்சுறுத்துவதற்காக அமலாக்கப் பிரிவை பாஜக அரசு ஏவிவிட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் போட்டியிலேயே பாரதிய ஜனதா கட்சி இல்லை. சட்டப்பேரவை தேர்தல் போட்டியிலேயே இல்லாத பாஜக, கேவலமான உத்திகளை கடைப்பிடிப்பதாக வேணுகோபால் கண்டனம் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் 3 கோடி மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்த கே.சி.வேணுகோபால், 3 கோடி மக்கள் ஆதரவு காங்கிரஸுக்கு உள்ளதால் மட்டகரமான உத்திகளை பாஜக செயல்படுத்துவதாக கடுமையாக சாடினார். முதல்வர் பகேலின் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பாஜகவின் விரக்தியை காட்டுவதாகவும் வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார்.