Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செஞ்சி அருகே பைக் -அரசு பஸ் மோதல் சென்னை தம்பதி, மகள் பலி:இறுதி சடங்கிற்கு வந்தபோது சோகம்

செஞ்சி: பைக் மீது பேருந்து மோதியதில் சென்னையை சேர்ந்த தம்பதி, மகள் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ராஜாம்புலியூரை சேர்ந்தவர் துரைக்கண்ணு(46). சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பச்சையம்மாள்(42). இவர்களது மகன் குணசேகர் (21) தந்தையுடன் கொத்தனார் வேலை செய்கிறார். மகள் கோபிகா(18), சென்னை கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். துரைக்கண்ணுவின் அண்ணன் நந்தகோபால் (55) விபத்தில் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து துரைக்கண்ணு குடும்பத்துடன் பைக்கில் நள்ளிரவு இரண்டு மணிக்கு செஞ்சிக்கு புறப்பட்டார்.

ஒரு பைக்கில் அவரும், மனைவி பச்சையம்மாள், மகள் கோபிகாவும், மற்றொரு பைக்கில் மகன் குணசேகரும் சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் செஞ்சி-திண்டிவனம் சாலை வல்லம் தொண்டியாற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே செஞ்சியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து, துரைக்கண்ணுவின் பைக் மீது மோதியது. இதில் துரைக்கண்ணு, பச்சையம்மாள், கோபிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னால் மற்றொரு பைக்கில் வந்ததால் குணசேகர் உயிர் தப்பினார். பெற்றோரும் தங்கையும் பலியானதை பார்த்து அவர் பித்து பிடித்தது போல கதறினார். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.