பெரம்பூர்: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில், மேம்படுத்தப்பட்டுவரும் கொளத்தூர் ஏரிக்கரையில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, வீட்டுவசதி வாரிய செயலாளர் காகர்லா உஷா, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது;
திமுக அரசு ஆட்சி பொறுப்பற்ற 45 மாதங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை பெருநகர சென்னைக்கு சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. புனரமைத்து ஏரிகளை அழகுபடுத்தி காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பயனுள்ள வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 13 ஏரிகள் 250 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவுபெறும்.இவ்வாறு கூறினார்.