சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு இலங்கை பயணிகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சர்வதேச புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்திலிருந்து, நேற்று காலை இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு செல்லும், அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வந்த இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி (43) என்ற பெண் பயணி, பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக சென்னை விமான நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார், பெண் பயணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர், மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னை வந்திருந்தார்.
அவர் குடியுரிமைச் சோதனை முடித்துவிட்டு, கன்வேயர் பெல்டில் வந்த லக்கேஜையும் எடுத்துவிட்டு, சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய மனைவி கதறித் துடித்தார். சக பயணிகள், விமான நிலைய மருத்துவக் குழுவுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து, பரிசோதித்த போது, அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அதோடு 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் இலங்கை பயணிகள் இருவர், சென்னை விமான நிலையத்தில் உயிரிழந்தது பற்றி, சென்னையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழைய விமான முனையத்தில், இதேபோல் அடிக்கடி பயணிகள் உயிரிழப்பு அவ்வப்போது நடந்து வந்தது. இந்நிலையில் புதிய சர்வதேச ஒருங்கிணைந்த முனையம், செயல்பாட்டிற்கு வந்த பின்பு, முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 2 இலங்கை பயணிகள், புறப்பாடு பகுதியில் ஒரு பெண் பயணியும், வருகைப் பகுதியில் ஒரு ஆண் பயணியும், மயங்கி விழுந்து இறந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.