சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும் வரை, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் கவுரி, கடந்த 2020ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இருப்பினும், அடுத்து புதிய துணை வேந்தரை நியமிக்க காலதாமதம் ஆகும் என்ற நிலை உள்ளது.
அது வரையில் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்ய, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் தலைமையில் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் அவர் தவிர சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வினய் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.