சென்னை : சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சோதனை அடிப்படையில் ஏ.சி.பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித் தடங்களில் தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டிகள் மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. இதனுடன் ஏசி பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேயுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் சென்னை மின்சார புறநகர் ரயில்களில் சோதனை அடிப்படையில் ஏ.சி.பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை அளித்து இருந்தது. அந்த பரிந்துரையின் கீழ், சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு எடுத்துள்ளது.முதற்கட்டமாக சோதனையின் அடிப்படையில் ஒவ்வொரு மின்சார ரயில்களிலும் 2 முதல் 3 ஏ.சி.பெட்டிகளை இணைத்து சோதனை ஓட்டம் நடத்துவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் அடுத்த 6 மாதத்திற்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.