சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்று மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் எத்தனை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அங்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், கல்வித்துறை துணை ஆணையருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 119 ஆரம்ப பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர் நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் ஆகியவற்றை மாநகராட்சி நடத்துகிறது.
இந்த பள்ளிகளில் 1,345 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், மீதமுள்ளவற்றை ஆசிரியர் தேர்வு வரியத்தின் நேரடி தேர்வு மூலமாகவும், பணியிடமாற்றம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன? எந்த விதிகளும் இல்லாவிட்டால் எந்த அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன? இடமாற்றம் மூலமாக நியமிப்பதாக இருந்தால் அதற்கு எந்த பணி விதி ஒப்புதல் அளிக்கிறது? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.