சென்னை: தமிழகத்தில் நேற்று 11 மாவட்டங்களில் 100 டிகிரி முதல் 103 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதர மாவட்டங்களில் சராசரியாக 98 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டது. மேலும் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பமும் அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக வட மாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள் என ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நேற்று இடி மின்னல் மழை பெய்தது.
வட மாவட்டங்களை பொருத்தவரையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, ராமாபுரம், போரூர், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் ஆழ்வார் திருநகர், ஆழ்வார்பேட்டை, மதுரவாயல், நெற்குன்றம், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை நேற்று இரவு நெடு நேரம் மழை நீடித்தது.