சென்னை: சென்னை- பகத் கி கோத்தி இடையே புதிய ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தானில் உள்ள பகத் கி கோத்திக்கு புதிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும். இதை நேற்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலை சென்னையிலிருந்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – பகத் கி கோத்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 20625) திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும். பகத் கி கோத்திக்கு மூன்றாம் நாள் மதியம் 12.15 மணிக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.45 மணிக்கு ரயில் புறப்பட்டால், இரண்டு நாட்கள் கழித்து பகத் கி கோத்தியை அடையும்.
மறு மார்க்கத்தில், பகத் கி கோத்தி – சென்னை சென்ட்ரல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 20626) திங்கள், புதன், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு பகத் கி கோத்தியில் இருந்து புறப்படும். அடுத்த நாள் இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் சூலூர்பேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், பல்ஹர்ஷா, சந்திராபூர், வார்தா, பாட்னேரா, அகோலா, புசாவல், வதோதரா, சபர்மதி பி.ஜி, மகேசன உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் இரண்டு ஏ/சி இரண்டு அடுக்கு பெட்டிகள், நான்கு ஏ/சி மூன்று அடுக்கு பெட்டிகள், நான்கு ஏ/சி மூன்று அடுக்கு எகானமி பெட்டிகள், ஆறு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் ஒரு லக்கேஜ் கம் பிரேக் வேன் உள்ளன.