சென்னை: சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளதால் நெல்லை பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு டெல்லி -வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை – மைசூர், சென்னை – கோவை என மொத்தம் 20க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக சென்னை- நெல்லை இடையே 660 கி.மீ தொலைவுக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை – திருநெல்வேலி இடையே 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில் இயக்கப்படும் நிலையில் 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என்றும், சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மூன்று நிலையங்களில் நின்று செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை -நெல்லை இடையான வந்தே பாரத் ரயிலை தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கான ரயில் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை- திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிட்டிருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு 20631/ 20632 என எண் ஒதுக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையில் நெல்லை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.