Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவன உயரிய விருது: இந்தியாவில் முதல் கவுரவம்

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் போக்குவரத்துத் துறையில் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம் என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த கவுரவத்தை பெற்ற ஒரே மெட்ரோ ரயில் அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் மரக்கன்று நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த முயற்சி, நிறுவனத்தின் விரிவான சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்துடன் ஒத்துப்போவதோடு, தேசிய மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் இலக்குகளை ஆதரிக்கும் வகையிலும் செயல்படுகிறது.

மேலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஒரு கருத்தரங்கமும் நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது செயல்பாடுகளில் நிலைத்தன்மையை பல பசுமை முன்முயற்சிகள் மூலம் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. 40 மெட்ரோ ரயில் நிலையங்களும் மிக உயர்ந்த பசுமை கட்டிட தரநிலைகளை கடைபிடிப்பதன் மூலம் ஐஜிபிசி பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளன. வழக்கமான மின்சார ஆதாரங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும், நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்ரோ அலுவலகங்களில் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மின்னணு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. இதில் மின்னணு பயணச்சீட்டு பயன்பாடு உள்ளிட்ட முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

நகர்ப்புற சுற்றுச்சூழலை மேம்படுத்த தொடர்ச்சியாக மரம் நடும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசுமை போக்குவரத்துக்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் போக்குவரத்துத் துறையில் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம் என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவில் இந்த கவுரவத்தைப் பெற்ற ஒரே மெட்ரோ ரயில் அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமாகும். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.