மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வெயில் சுட்டெரித்த நிலையில், மாலை 3.30 மணிக்கு திடீரென கருமேகம் சூழ்ந்து, பலத்த சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடம் மழை பெய்தது. இதன் காரணமாக, சென்னை விமான நிலைய பகுதியில் மோசமான வானிலை நிலவியது.
அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து 186 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதுரையில் இருந்து 70 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், திருச்சியில் இருந்து 68 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவையிலிருந்து 145 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.
அதேபோல் சென்னையில் இருந்து மஸ்கட் புறப்பட வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கை செல்ல வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஐதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், சேலம் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 7 பயணிகள் விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து, ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.