Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடல்; சென்னையில் புறப்பாடு, வருகை என 11 விமானங்கள் ரத்து: தாய்லாந்தில் இருந்து தோகா சென்ற 3 விமானம் சென்னை வந்தது

மீனம்பாக்கம்: ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வந்த தாக்குதலில் திடீரென அமெரிக்கா தலையிட்டது. ஈரானின் ராணுவ தளங்கள் மீது குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதனால் கத்தாரில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் திடீரென போர் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளர். இருப்பினும் கத்தார் மீதான ஈரான் தாக்குதலை தொடர்ந்து கத்தார், ஐக்கிய அமீரகம், பக்ரைன் நாடுகள், தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இதனால் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கத்தார் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மறு உத்தரவு வரும் வரை, தங்களுடைய அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்றிரவு 11 மணிக்கு குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நள்ளிரவு 11.45 மணிக்கு மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று அதிகாலை 1 மணிக்கு அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 3.55 மணிக்கு தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அதிகாலை 4.20 மணிக்கு தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.35 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல் தோகாவில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணிக்கு சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் காலை 6.55 மணி குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10.25 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.25 மணிக்கு அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்திய கிழக்கு நாடுகளில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், தாய்லாந்து நாட்டில் இருந்து தோகாவுக்கு சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்லைன்சின் 3 விமானங்கள், இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னைக்கு வந்து தரை இறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதற்கிடையே லண்டன், பக்ரைன், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை, புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

எனவே சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படுகிறது? எப்பொழுது வருகிறது? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு, தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.