சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக் கலைத்துறை அறிவித்துள்ளது.முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன்படி கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி 2வது ஆண்டாக நடைபெற உள்ளது. பெங்களூரு, உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகளை கொண்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம் எனவும் தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு ரூபாய் 20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூபாய் 50 நுழைவு கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்றும் கேமராவுக்கு ரூ.50, வீடியோ எடுக்க ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 3ம் தேதி அன்று தொடங்கும் இந்த கண்காட்சி ஜூன் 5ம் தேதி நிறைவு பெறுகிறது.