சென்னை: சென்னை சூளைமேட்டில் அறுந்து வந்த பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பாரதியார் தெருவை சேர்ந்த டைலர் தண்டபாணியின் இளையமகன் பிரசன்னா, அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தார். 7ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சிறுவன் பிரசன்னா, நண்பர்களுடன் விளையாட சென்றார். அப்போது அறுந்து வந்த பட்டத்தை பிடிக்க பெருமாள் என்பவருடைய வீட்டின் 2வது மாடியில் ஏறினார். பட்டத்தை பிடிக்க முயன்ற சிறுவன் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து வந்த பெற்றோர், சிறுவன் பிரசன்னாவுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த தனது மகன் பிரசன்னாவின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தண்டபாணி தானம் செய்துள்ளார். சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனுடன் விளையாட சென்ற சக நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.