சென்னை: ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி மதிப்புடைய 13 கிலோ தங்கம், 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவற்றை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 113 பயணிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கம், விலை உயர்ந்த ஐபோன்கள், லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்கள் போன்றவற்றை ரகசியமாக கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இணைந்து, ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதில் 73 பேர் கடத்தல் விவகாரங்களில் தலையிடாத பயணிகள் என்று தெரிய வந்தது. அவர்களை மட்டும் சுங்க அதிகாரிகள் வெளியில் செல்ல அனுமதித்தனர்.
பிறகு 113 பயணிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை சோதனையிட்டனர். மாலை வரை சோதனை நீடித்ததால் பயணிகள், எங்களை பசி பட்டினியில் வதைத்து கொண்டு, இவ்வாறு விசாரணை நடத்துகிறீர்களே என கேட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். அதோடு வெளியில் அனுப்புங்கள், நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறோம் என்று கூறினார்கள்.ஆனால் அதிகாரிகள் அவர்களை வெளியே அனுப்ப மறுத்து உணவுக்கு ஏற்பாடுகள் செய்தனர்.
உணவு வந்ததும் அனைவரையும் சுங்கத்துறை அலுவலகத்தில் தரையில் உட்கார வைத்து வாழை இலைகள் போட்டு, திருமண வீடு போல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் அதிகாரிகள் விசாரணை மற்றும் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய தொடங்கினர். இந்த சோதனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்தது. பல பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தனர். சிலர் சூட்கேஸ் லைனிங்கிற்குள் தங்க ஸ்பிரிங் கம்பிகளாக மறைத்து வைத்திருந்தனர்.
அதோடு சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள் என மொத்தம் 204 போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூக்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் தங்கம் மட்டும் மொத்தம் 13 கிலோ இருந்தது. அதில் 10 கிலோ தங்க கட்டிகள், மூன்று கிலோ தங்க பசைகள். இதையடுத்து அதிகாரிகள் தங்கம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இவைகளின் மொத்த சர்வதேச மதிப்பு ரூ.14 கோடி என கூறப்படுகிறது.
அதன்பின்பு கடத்தல் பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனர். மேலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடத்தல் பொருட்கள் கொண்டு வருபவர்களை மட்டுமே, சுங்க சட்டப்படி கைது செய்ய முடியும். அதற்கு குறைவாக கடத்தல் பொருட்கள் இருந்தால், வழக்குகள் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்து விடுவார்கள். எனவே இவர்கள் 113 பேரையும் அதிகாரிகள் ஜாமீனில் விடுவித்தனர். ஆனால் இந்த 113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள் தான். இவர்களை இயக்கும் முக்கிய கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.