சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் உடை அணிந்த ஒரு நபர் தன்னை டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி பயணிகளின் டிக்கெட்டுகளைப் பரிசோதித்தபடியே, தன்னிடமிருந்த போலியான பயண சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பயணி ஒருவர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது, டிக்கெட் கவுன்டர் அருகே புறநகர் ரயில் டிக்கெட் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நபரை, ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த வெங்கட் கிஷோர் (42) என்பதும், புறநகர் ரயில் டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளிடம் டிக்கெட் உறுதி செய்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. உடனடியாக வெங்கட் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.